விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூர்











வாஞ்சா கல்பதருப்யஸ்ய ச க்ருபா-சிந்துப்ய யேவ ச
பதிதானாம் பாவனேப்யோ வைஷ்ணவேப்யோ நமோ நம:
நிலை இழந்த ஆத்மாக்களிடம் கருணை உள்ளவர்களும், கற்பக விருட்ச மரங்களைப் போன்றவர்களுமான பிரபுவின் வைஷ்ணவ பக்தர்கள் அனைவருக்கும் எனது மரியாதை கலந்த வணக்கத்தை செலுத்துகிறேன்.
விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூர்
இளமைப்பருவம்







விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூர் 1638ல் மேற்கு வங்காளத்தில் உள்ள நதீயா மாவட்டத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் அவதரித்தார். அவருடைய பெற்றோர் அவரை நன்கு படிக்கவைத்தனர். விஸ்வநாத சக்ரவர்த்தி, நரோத்தம தாஸ தாகூரின் வழிவந்த ராதாரமண சக்ரவர்த்தியிடமிருந்து ஆன்மீக தீக்ஷை பெறும் பாக்கியத்தைப் பெற்றார். அவர் சமஸ்கிருத பண்டிதராகவும், கவிஞராகவும், பிரசங்கம் அளிப்பதில் நிபுணராகவும் திகழ்ந்தார். அவர் வாதத்தில் அனைவரையும் வென்றுவந்தார். விஸ்வநாத சக்ரவர்த்தி சிறுவனாக இருந்தபோதே, அவருடைய பெற்றோர்கள் அவருக்கு அழகிய இளம்பெண்ணை திருமணம் செய்துவைத்தனர். இருப்பினும் அவருக்கு திருமண வாழ்க்கையில் அந்த அளவிற்கு நாட்டம் இல்லை. அவர் வீட்டைவிட்டு வெளியேறி, விருந்தாவனம் சென்றடைந்து, ராதா குண்டத்தில் தங்கினார்.
இல்லற வாழ்விலிருந்து விலகுதல்









சில வருடங்களுக்குப் பிறகு, தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக இல்லம் திரும்பினார். அவருடைய குரு ராதாரமணர், விஸ்வநாதரிடம் கூறினார், “அருமை சீடனே, நீ எங்களைவிட்டு பிரிந்து சென்று நீண்டகாலமாகியதால், நாங்கள் அனைவரும் வருத்தமடைந்துள்ளோம், குறிப்பாக உனது மனைவி உனது பிரிவால் மிகவும் கவலையுற்றருக்கிறாள். தற்போது நீ பெரியவனாகி விட்டதால், உனக்கு சூழ்நிலை புரியும் என்று நினைக்கிறேன். இன்று நீ உன் இல்லம் சென்று உன் மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடு என்றார்.இரவுப்பொழுது வந்ததும் அவர் தனது குருவின் கட்டளையைப் பின்பற்றி, தனது மனைவியுடன் இரவு முழுவதும் கண் விழித்திருந்து, கிருஷ்ணருடைய புனித நாமங்களை உச்சரித்துக்கொண்டிருந்தார். மறுநாள் காலை, இந்த தகவலைக் கேட்டறிந்த ராதாரமணர் மிகவுமே மகிழ்ந்தார். தனது சீடனுக்கு ஆன்மீக வாழ்வில் இருந்த உண்மையான ஆவலை புரிந்துகொண்டார்.
அதியசம்






ராதாரமணர் ஸ்ரீமத் பாகவதத்தின் 18,000 ஸ்லோகங்களை பிரதி எடுப்பதற்காக விஸ்வநாதரை தனது இல்லத்திற்கு அழைத்தார். இதற்கு விஸ்வநாதரும் மகிழ்வுடன் சம்மதித்தார். இதனை அவர் வீட்டின் வெளியே அமர்ந்து மேற்கொண்டிருந்தார். அப்போது அவர்மேல் வெயில்பட்டு தகித்தபோது, அதிசயமாக நிழலும் வந்தது. அந்த குளுமையான நிழலில் அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில், வானத்தில் திரண்ட கருமேகம், சூறாவளிக் காற்றைத் தாண்டி, விஸ்வநாத சக்ரவர்த்தி அமர்ந்திருந்த இடத்தை தவிர மற்ற அனைத்து இடங்களையும் நீர் வெள்ளமாக்கியது. துளியளவு மழைநீர்கூட விஸ்வநாதர் மீது படாமல் இருப்பதையும், அவர் தொடர்ந்து புராணத்தை எழுதுவதில் மட்டுமே கவனமாக இருப்பதையும் மக்கள் கண்டனர். அற்புதமான இச்செயலின் மூலமாக விஸ்வநாதர் பகவானால் பாதுகாக்கப்படுவதை மக்கள் உணர்ந்தனர்.
விருந்தாவனத்திற்கு திரும்புதல்







பின்னாளில் தனது குருவின் உத்தரவின்படி, விஸ்வநாதர் விருந்தாவனத்திற்கு திரும்பினார். அங்கே அவர் குருவின் மகிமைகளைப் போற்றும் புகழ்பெற்ற பாடலான “குரு அஷ்டகம்” எழுதினார். அவர் எழுதுகின்றார், “அதிகாலையில் எழுந்து இந்த பாடலை கவனத்துடன் சப்தமாக பாடுபவர் மரணத்தருவாயில் கிருஷ்ணரை அடைவது நிச்சயம்” என்கிறார். ஹரே கிருஷ்ண இயக்கத்தின் பக்தர்கள் தினந்தோறும் அதிகாலையில் இந்த பாடலை பாடுகின்றனர். விஸ்வநாதர் விருந்தாவனத்தில் இருந்தபோது, அவர் ராதா கோகுலானந்தரை பூஜித்துவந்தார். அத்துடன் அவர் சிறிதுகாலத்திற்கு, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவினால் ரகுநாத தாஸ கோஸ்வாமிக்கு வழங்கப்பட்ட கோவர்த்த சிலாவாகிய கிரிராஜரையும் பூஜித்துவந்தார்.
நிர்வாகம்







1700ம் வருடங்களில், ஆறு கோஸ்வாமிகளும் ஆன்மீக உலகிற்கு திரும்பியிருந்தனர். அவர்கள் விஸ்வநாதரையே விருந்தாவன வைஷ்ணவர்களை வழிநடத்துபவராக விட்டுச்சென்றனர். ஜீவ கோஸ்வாமி இந்த உலகை விட்டுச் சென்ற சில வருடங்களுக்குள் பேரிடர் சூழ்ந்தது. அவரால் எழுதப்பட்டதை குறித்து கருத்து வேறுபாடுகள் எழுந்தன. ஜீவரின் பெரும்பாலான புத்தகங்கள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உபதேசங்களைப் பின்பற்றி, ராதையும் கிருஷ்ணரும் திருமணமாகாத காதலர்களாகவே சித்தரிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆன்மீக முன்னேற்றம் அவ்வளவாக இல்லாத ஜீவருடைய சீடர்களில் பலர், ராதா கிருஷ்ணரின் தூய அன்பை வரவேற்கவில்லை. இதன் காரணமாகவே ஜீவர் இத்தகைய சீடர்களை ராதா கிருஷ்ணரை திருமணமாகிய தம்பதிகளாக பூஜிக்குமாறு ஊக்குவித்தார். ராதா கிருஷ்ணரை திருமண தம்பதிகளாக பூஜிப்பது பக்குவமற்ற பக்தர்களை அபராதங்களிலிருந்து பாதுகாக்கும், ஏனெனில் பக்குவமடைந்துள்ள பக்தர்களால் மட்டுமே இத்தகைய விஷயங்களை முறையாக புரிந்துகொள்ள முடியும். ஜீவ கோஸ்வாமியின் நோக்கத்தை தவறாக புரிந்துகொண்ட அவருடைய சீடர்கள், ராதையும் கிருஷ்ணரை பற்றி பகிரங்கமாக விமர்சிக்கத் தொடங்கினர்.
கொல்வதற்கான சதித்திட்டம்







வைஷ்ணவ அதிகாரியாக இருந்த விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூருக்கு இந்த தவறான புரிந்துணர்வை நீக்கவேண்டியது கடமையாக இருந்தது. பொதுக்கூட்டத்தில், ராதையும் கிருஷ்ணரும் காதலர்களே என்பதை நிரூபிப்பதற்காக அவர் எண்ணற்ற சாஸ்திர கோட்பாடுகளை மேற்கோள் காட்டினார். இவ்விதமாக எதிராளிகள் தோற்கடிக்கப்பட, கூட்டம் நிறைவுற்றது. இத்தகைய தோல்வி எதிராளிகளை வெறுப்படையச் செய்யவே, அவர்கள் விஸ்வநாதரை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டினர். அவர்களில் ஒருவர், விஸ்வநாதர் தினந்தோறும் அடர்ந்த வனத்திற்குள் தனிமையில் சென்றுவருவது வழக்கம் என்பதை அறிந்திருந்தார். எனவே அவர்கள் கையில் ஆயுதங்களை ஏந்தி, அந்த இடத்திற்கு சென்றனர். ஆனால் அங்கே அவர்கள் விஸ்வநாதருக்கு பதிலாக, ஒரு அழகான இளம்மங்கையை கண்டனர். மலர்களைப் பறித்துக் கொண்டிருந்தவள், பண்டிதர்களைக் கண்டதும், “நான் ராதையின் பணிப்பெண், நான் பறித்துக் கொண்டிருக்கும் மலர்களை, ராதை அழகான மாலையாக தொடுத்து கிருஷ்ணருக்கு அர்ப்பணிப்பாள்” என்று தெரிவித்தாள். அதனையடுத்து, கணநேரத்தில் அவள் மறைய அங்கே விஸ்வநாதர் நின்றிருந்தார்.
அந்த இளம்பெண் விஸ்வநாதரின் ஆன்மீக ஸ்வரூபம் என்பதை, கொலைசெய்ய வந்த பண்டிதர்கள் புரிந்துகொண்டனர். உடனே அவர்களுடைய மனம் மாற்றமடைந்தது, மேலும் அகந்தையினாலான தங்களுடைய பெரும் தவற்றையும் உணர்ந்தனர். ஆயுதங்களை துறந்து, தலையை தொங்கவிட்டவாறு, அவர்கள் “கருணையுடன் எங்களை மன்னித்தருளுங்கள்” என்று வேண்டினர். சாதுவான் விஸ்வநாதர் அவர்களை மன்னிக்க, அவர்கள் அனைவரும் அவருடைய உண்மையான சீடர்களாயினர்.
விஸ்வநாதருடைய சிறந்த சீடர்








விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூருக்கு நூற்றுக்கணக்கான சீடர்கள் இருந்தனர். அவர்களுள், அறிவார்ந்த சீடராக இருந்தவரே புகழ்பெற்ற கோவிந்த பாஷ்யம் எழுதிய பலதேவ வித்யாபூஷணர் ஆவார். இத்தகைய தலைசிறந்த படைப்பை அவர் ஜெய்பூரில் உள்ள கோவிந்தஜீயின் ஆணைப்படியே மேற்கொண்டுள்ளார். ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி, நரோத்தம தாஸ தாகூரின் சீடப்பரம்பரையில் வருபவராவார். மேலும் கிருஷ்ண லீலையில் அவர் வினோத மஞ்சரி என்றறியப்படுறார்.
ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூர் கீ ஜெய்!







மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
http://www.facebook.com/உத்வேககதைகள்-109460164055445
Comments
Post a Comment