கிருஷ்ண லீலையில் பங்குபெற்ற கூனுடைய இளம் பெண் குப்ஜாவின் (த்ரிவக்ரா) முற்பிறவி







த்ரிவக்ரா - கூனுடைய இளம் பெண்








பகவான் கிருஷ்ணரும் பலராமரும், கூனுடைய ஒரு இளம் பெண் சந்தனக் குழம்பு நிரம்பிய ஒரு கோப்பையை தெருவில் எடுத்து செல்வதை கண்டார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அந்த கூனியிடம் ஹாஸ்யமாக பேசித் தம் நண்பர்களை மகிழ்விக்க எண்ணி, அவளை பற்றிய எல்லா விபரங்களையும் கேட்டார். அந்த பெண் கிருஷ்ணரிடம், "அன்புடைய சியமசுந்தரா, நான் கம்சனின் வேலைக்காரி. அவருக்கு நான் தினமும் சந்தனம் தயாரித்து அளித்து வருகிறேன். ஆனால் இந்த சந்தனத்தை பெறுவதற்கான தகுதி உடையவர் நீங்கள் இருவர் மட்டுமே" என்று கூறி, கிருஷ்ணர் மற்றும் பலராமரின் உடல்களின் மீது மிகுந்த பக்தியுடனும் திருப்தியுடனும் அப்பெண் சந்தனத்தை பூச துவங்கினாள். இத்தொண்டின் மூலம் மகிழ்வுற்ற கிருஷ்ணர், அவளுக்கு என்ன வெகுமதி அளிக்கலாம் என்று சிந்திக்கலானார். கிருஷ்ணரின் கவனத்தை தன் பால் திருப்ப என்னும் பக்தன், மிகுந்த அன்புடனும் பக்தியுடனும் அவருக்கு தொண்டாற்ற வேண்டும். பகவான் கிருஷ்ணர், தன் கால் விரல்களால் கூனியின் பாதங்களை அழுத்தியபடி, கைவிரல்களால் அவளின் முகவாயை தாங்கிக்கொண்டு, ஒரே அசைவில் அவளது கூனினை நிமிர்த்தினார்.கூனியான அப்பெண்ணின் சேவையில் திருப்தியடைந்த கிருஷ்ணரின் கைகள் பட்ட மாத்திரத்தில், அவள் பெண்களிலேயே சிறந்த அழகியாக உருமாறினாள். கிருஷ்ண உணர்வை நாடுபவன் அழகாகவோ, தகுதியுடையவராகவோ இருக்க தேவையில்லை. கிருஷ்ண உணர்வு பெற்று கிருஷ்ணருக்கு தொண்டாற்றும் பொழுது அந்த பக்தன் அழகிலும் தகுதியிலும் சிறந்து விளங்குகிறான்.







குப்ஜாவின் முற்பிறவி
( ஆதாரம் :- கர்க சம்ஹிதை)







பஹீலாஸ்வன் (ஜனக மஹராஜா) நாரதர் முனிவரிடம் தேவர்களுக்கும் அரியவரான ஶ்ரீ கிருஷ்ணர் மகிழுமளவு எத்தகைய கடினமான தவத்தை சைரந்த்ரி குப்ஜா முற்பிறவியில் செய்திருந்தாள் ?
நாரதர், பஹீலாஸ்வரரிடம் : "மன்னா! கோடி மன்மத ஸ்வரூபமான ஸ்ரீராமசந்திரன், பஞ்சவடியில் வாசம் செய்த சமயம் இராவணனின் தங்கை சூர்ப்பனகை என்னும் அரக்கி அவரைக்கண்டு மோகம் கொண்டாள். ஸ்ரீ ரகுநாதன் ஏகபத்தினி விரதத்தில் உறுதியானவர். ஆகவே அவர் மனதில் வேறு எந்தப் பெண்ணிற்கும் இடமில்லை என்று யோசித்த ராவணனின் தங்கை கோபத்தால் சீதாவை தின்றுவிடுவதற்காக ஓடினாள். தம்பியான லஷ்மணன் கோபம் கொண்டு கூரான கத்தியால் அக்கணமே அவளது மூக்கையும், காதையும் அறுத்துவிட்டார். மூக்கு அறுந்ததால் அவள் இலங்கைக்குச் சென்று ராவணனிடம் இந்த விவரங்களைக் கூறி கதரினாள். பின்னர் மிகவும் துயரமுற்று, புஷ்கர தீர்த்தத்திற்குச் சென்றாள். அங்கு நீரில் நின்று கொண்டு ஸ்ரீராமனை கணவனாக அடையும் விருப்பத்தினால் சூர்ப்பனகை பகவான் சங்கரனை நோக்கி பத்தாயிரம் ஆண்டுகள் வரை தவம் இயற்றினாள். இதனால் மகிழ்ந்த தேவாதிதேவன் உமாபதி புஷ்கர தீர்த்தத்திற்கு வந்து உனக்கு வேண்டிய வரம் கேள் என்று கூறினார்.
சூர்ப்பனகை பரமசிவனிடம் : "தேவதேவா தாங்கள் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்ற வல்லவர். ஆகவே சத்புருஷர்களுக்கு விருப்பமான ஸ்ரீராமன் என் கணவனாகும்படி வரம் தாருங்கள்.என்று கேட்டாள்.
சிவன் சூர்ப்பனகையிடம்: 'அரக்கியே கேள். இந்த வரம் உனக்கு இப்போது பலன் தராது. த்வாபரயுக முடிவில் மதுராபுரியில் ஐயமின்றி உனது இந்த விருப்பம் நிறைவேறும்.என்று வரமளித்தார்.
நாரதர் பஹீலாஸ்வர மன்னனிடம்: "மன்னா ! விருப்பப்படி உருவம் தரிக்கும் சூர்ப்பனகை என்னும் அரக்கியே மதுராபுரியில் குப்ஜா எனும் பெயரில் பிரசித்தமானாள். சிவபெருமானின் வரத்தாலேயே அவள் ஸ்ரீ கிருஷ்ணன் அன்பிற்குகந்தவளானாள். என்று பதிலளித்தார்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment