இந்தியர்களது மிக முக்கியமான கடமை
பாரத-பூமி ஹைல மனுஷ்ய ஜன்ம ஜாத
ஜன்ம ஸார்தக கரி' கர பர-உபகார
மொழிபெயர்ப்பு
யாரெல்லாம் பாரத பூமியில் மனிதப் பிறவி எடுத்துள்ளார்களோ, அவர்கள் தங்களுடைய வாழ்வை வெற்றிகரமானதாக ஆக்கிக் கொண்டு, இதர மக்கள் அனைவரின் நன்மைக்காகவும் உழைக்க வேண்டும்
பொருளுரை
சைதன்ய மஹாபிரபுவின் வள்ளல் தன்மை இந்த மிக முக்கியமான ஸ்லோகத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் வங்காளத்தில் பிறந்தார் என்பதால் வங்காளிகள் அவருக்குச் செய்ய வேண்டிய சிறப்புக் கடமை உள்ளது என்ற போதிலும், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இங்கே வங்காளர்களை மட்டுமின்றி இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரையும் விளிக்கின்றார். இந்த பாரத பூமியில்தான் உண்மையான மனித நாகரிகம் வளர்க்கப்பட முடியும்
வேதாந்த சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி மனித வாழ்க்கை இறைவனை உணர்வதற்கானதாகும், அதா தோ பிரம்ம ஜிக்ஞாஸா யாரொருவன் பாரத பூமியில் (பாரத-வர்ஷ) பிறக்கிறானோ அவன் வேத நாகரிகத்தின் உபதேசங்களையும் வழிகாட்டுதலையும் சாதகமாக ஏற்றுக்கொள்வதற்கான விசேஷ வசதிகளுடன் உள்ளான். அவன் ஆன்மீக வாழ்வின் அடிப்படைக் கொள்கைகளைத் தானாகப் பெறுகிறான் எளிமையான கிராமத்து விவசாயிகள், கல்வி அறிவோ வசதியோ இல்லாதவர்கள் உட்பட இந்திய மக்களில் 99.9 சதவீத மக்கள் ஆத்மாவின் உடல் மாற்றத்தை நம்புகின்றனர் கடந்த வாழ்விலும் மறுவாழ்விலும் நம்பிக்கை கொண்டுள்ளனர், கடவுளை நம்புகின்றனர், இயற்கையாகவே பரம புருஷ பகவானை அல்லது அவரது பிரதிநிதியினை வழிபட விரும்புகின்றனர். இத்தகு கருத்துகள் இந்தியாவில் பிறந்தவர்கள் இயல்பாக இருக்கும் தன்மைகளாகும். இந்தியாவில் கயா, வாரணாசி, மதுரா, பிரயாகை, பிருந்தாவனம், ஹரித்வார். ராமேஸ்வரம், ஜகந்நாத புரி முதலிய பல்வேறு புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. மக்கள் இன்றும் ஆயிரக்கணக்கில் அங்கு செல்கின்றனர். பாரதத்தின் இன்றைய தலைவர்கள், இறைவன்மீது நம்பிக்கை கொள்ளாதீர்கள் என்றும் மறுபிறவியை நம்பாதீர்கள் என்றும் கற்பிக்கின்றனர். தெய்வீகமான வாழ்க்கைக்கும் அசுரத்தனமான வாழ்க்கைக்கும் இடையே உள்ள வேற்றுமையைக் கற்பிப்பதில்லை, மது அருந்தவும் மாமிசம் உண்ணவும் நிலைதாழ்ந்து சீர்குலையவும் கற்றுத் தருகின்றனர்; அவ்வாறு இருப்பினும் இந்திய மக்கள் பாவப்பட்ட வாழ்க்கையின் நான்கு செயல்களான தகாத பாலுறவு, மாமிசம் உண்ணுதல், போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல், சூதாடுதல் போன்றவற்றிற்கு மிகவும் அஞ்சுகிறார்கள். மேலும், எங்கே ஓர் ஆன்மீக விழா நிகழ்ந்தாலும் ஆயிரக்கணக்கில் அங்கு கூடுகின்றனர். எமக்கு இதில் நேரடி அனுபவம் இருக்கிறது கல்கத்தா, பம்பாய், சென்னை, அகமதாபாத் அல்லது ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் ஸங்கீர்த்தன விழாவை நிகழ்த்தும் பொழுதெல்லாம் மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி செவியுறுகின்றனர். சில சமயங்களில் யாம் ஆங்கிலத்தில் பேசினாலும் ஆங்கிலம் அறியாத மக்களும் வந்து எமது உரையைக் கேட்கின்றனர் கடவுளின் போலி அவதாரங்கள் பேசும்போதுகூட மக்கள் ஆயிரக்கணக்கில் கூடுகின்றனர்; ஏனெனில், இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் இயற்கையான ஆன்மீக ஆர்வத்தைக் கொண்டுள்ளனர். ஆன்மீக வாழ்வின் அடிப்படைக் கொள்கைகள் அவர்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு வேதக் கொள்கைகளில் சிறிதளவு பயிற்சியளிக்கப்பட்டால் போதும். எனவே, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இங்கு கூறுகிறார். ஜன்ம ஸார்தக கரி' கர பர-உபகார, ஓர் இந்தியன் வேத நெறிகளைப் பற்றி நன்கு அறிந்து கொண்டால், உலகம் முழுமைக்கும் அவனால் மிகச்சிறந்த சமூக நலப்பணியைச் செய்யவியலும்.
தற்சமயத்தில், கிருஷ்ண உணர்வு அல்லது கடவுளுணர்வு இல்லாத காரணத்தினால், முழு உலகமும் இருளில் உள்ளது. பாவ வாழ்வின் நான்குகோட்பாடுகளான மாமிசம் உண்ணுதல், தகாத பாலுறவு, சூதாட்டம் போதைப் பழக்கம் ஆகியவற்றினால் மறைக்கப்பட்டுள்ளது. எனவே பாவ வாழ்விலிருந்து விடுதலை பெறும்படி மக்களை அறிவுறுத்துவதற்கு பலமான பிரச்சாரம் தேவைப்படுகிறது. இஃது அமைதியையும் வளத்தையும் கொண்டு வரும்; திருடர்கள், கொள்ளையர்கள் மற்றும் பெண் பித்தர்கள் இயற்கையாகவே குறைந்துபோவர், மனித சமுதாயம் முழுவதும் இறையுணர்வைப் பெறும்
மிகவும் தாழ்ந்த பெண் பித்தர்கள் கூட மிகச் சிறந்த பக்தர்களாகி வருவதே இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை உலகம் முழுவதும் யாம் பிரச்சாரம் செய்வதின் கண்கூடான பலனாகும். இஃது ஒரேயொரு இந்தியன் உலகத்திற்காகச் செய்யப்பட்ட பணிவான சேவையாகும். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அறிவுறுத்தியபடி எல்லா இந்தியர்களும் இப்பாதையை ஏற்றிருந்தால், உலகிற்கு ஒரு தலைசிறந்த பரிசை பாரதம் அளித்திருக்கும் இந்தியா புகழாரம் சூட்டப்பட்டு பெருமை அடைந்திருக்கும். ஆனால் இப்பொழுதோ பாரதம் வறுமையால் வாடும் தேசமாகக் கருதப்படுகிறது அமெரிக்கா அல்லது வேறொரு செல்வச் செழிப்புமிக்க தேசத்திலிருந்து பாரதத்திற்கு எவரேனும் வரும்போது, வழியெங்கிலும் வறுமையில் ஏழைகள் இருவேளை உணவிற்குக்கூட வழி இல்லாமல் இருப்பதைக் காண்கின்றனர். அவர்களின் துயர்துடைக்கும் நலப்பணிகளின் பெயரில் உலகத்தின் பல பகுதிகளிலிருந்து பணம் வசூலித்துத் தங்களுடைய புலனின்பத்திற்குச் செலவிடும் பல நிறுவனங்கள் உள்ளன. தற்போது, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஆணையின் கீழ் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் தொடங்கப்பட்டு, மக்கள் இந்த இயக்கத்தினால் பயனடைகிறார்கள். எனவே, இந்தியாவை வழிநடத்தும் தலைவர்களின் இன்றைய கடமை, இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்தியாவிற்கு வெளியே இந்தப் பாதையினை பிரச்சாரம் செய்யத்தக்க பிரச்சாரகர்களை உருவாக்குவதாகும். மக்கள் இதனை ஏற்றுக்கொள்வர்; இந்திய மக்களுக்கும் உலகின் இதர மக்களுக்கும் இடையில் கூட்டுறவு ஏற்படும், அப்போது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் திருப்பணி நிறைவேறிவிடும். அதன் பின்னர், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு உலகம் முழுவதும் புகழப்படுவார், மக்கள் இப்பிறவியில் மட்டுமல்ல, மறுபிறவியிலும் கூட-இயற்கையாகவே மகிழ்ச்சி அடைவர், அமைதியும் வளமும் பெறுவர்; ஏனெனில், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணரை அறிபவர் எவரும் எளிதாக இந்த பிறப்பு இறப்புத் தொடர்ச்சியிலிருந்து விடுபட்டு முக்தியடைந்து மீண்டும் இறைவனின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியும் என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது எனவே, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, ஒவ்வோர் இந்தியனும் தனது இயக்கத்தில் பிரச்சாரகராகி உலகத்தினை அபாயகரமான குழப்பத்திலிருந்து காப்பாற்றுமாறு வேண்டுகிறார்.
இஃது இந்தியர்களது கடமை மட்டுமல்ல, அனைவருமே மேற்கொள்ள வேண்டிய கடமை. அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் சார்ந்த பெண்களும் இந்த இயக்கத்திற்கு முழுமுனைப்புடன் ஒத்துழைப்பது எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மனித சமுதாயத்திற்குச் செய்யப்படும் தலைசிறந்த நலப்பணி, இறையுணர்வை (கிருஷ்ண உணர்வை) எழுப்புவதே என்பதை ஒருவன் தெளிவாக அறிய வேண்டும். எனவே இவ்வுயர்ந்த இயக்கத்திற்கு அனைவரும் உதவ வேண்டும். இது ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாவது ஸ்கந்தம், இருபத்திரண்டாம் அத்தியாயம் 35வது ஸ்லோகத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
( ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / ஆதிலீலை / 9.42 )
Comments
Post a Comment