காண்டம் 2 / அத்தியாயம் 4 /
பதம் 12-
23
*************************************************************************
பதம் 12
ஸ்ரீசுக உவாச
மொழிபெயர்ப்பு
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஜட உலகை சிருஷ்டிப்பதற்காக இயற்கையின் முக்குணங்களை ஏற்கும் பரமபுருஷ பகவானிடம் எனது பணிவான வணக்கங்களா நான் சமர்ப்பிக்கிறேன். நினைத்தற்கரிய செயல்களைப் புரிபவரான அவரே அனைவரின் உடலிலும் வாழும் பூரண முழுமையாவார்.
பதம் 13
மொழிபெயர்ப்பு
புனித பக்தர்களை எல்லாத் துயரங்களிலிருந்தும் விடுவிப்பவரும், பக்தரல்லாத அசுரர்களின் நாஸ்திக மனோபாவங்களின் வளர்ச்சியை அழிப்பவரும், பரிபூரண வாழ்வையும், உன்னத உருவையும் கொண்டவருமான அவருக்கு எனது பணிவான வணக்கங்களை மீண்டும் நான் சமர்ப்பிக்கிறேன். மிக உயர்ந்த ஆன்மீகிகளுக்கு, அவர்களுக்குரிய பிரத்தியேகமான இலக்குகளை அவர் வழங்குகிறார்.
பதம் 14
மொழிபெயர்ப்பு
யது வம்சத்தினரின் சகாவும், பக்தரல்லாதவர்களுக்கு எப்பொழுதுமே பிரச்சினையாகவும் உள்ளவரான அவருக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். அவரே ஜட, ஆன்மீக உலகங்களின் பரம அனுபவிப்பாளர் என்ற போதிலும், ஆன்மீக வெளியிலுள்ள தமது சொந்த வசிப்பிடத்தை அவர் அனுபவித்து மகிழ்கிறார். உன்னதமான அவரது ஐசுவரியம் அளவிட முடியாததாக இருப்பதால் அவருக்குச் சமமானவரும் எவருமில்லை.
பதம் 15
மொழிபெயர்ப்பு
சர்வ மங்களம் பொருந்திய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய பெருமைகள், நினைவுகள், அவரது தரிசனம், பிரார்த்தனைகள், அவரைப் பற்றி கேட்ட மற்றும் அவரது வழிபாடு ஆகியவை சாதகனின் பாவ விளைவுகளை எல்லாம் உடனே தூய்மை செய்துவிடக் கூடியவையாகும். அவருக்கு எனது வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.
பதம் 16
மொழிபெயர்ப்பு
சர்வ மங்களம் பொருந்திய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் எனது மரியாதை கலந்த வணக்கங்களை மென்மேலும் நான் சமர்ப்பிக்கிறேன், புத்தி கூர்மையுள்ளவர்கள், அவரது தாமரைப் பாதங்களில் சரணடைவதன் வாயிலாக, நிகழ் மற்றும் எதிர்கால வாழ்வுகளின் எல்லாப் பற்றுக்களிலிருந்தும் விடுபட்டு சிரமமின்றி ஆன்மீக வாழ்வை நோக்கி முன்னேறுகின்றனர்.
பதம் 17
மொழிபெயர்ப்பு
புலமை வாய்ந்த பெரும் முனிவர்கள், பெரும் கொடை வள்ளல்கள், சிறந்த உழைப்பாளிகள், பெரும் தத்துவவாதிகள், யோகிகள், வேத மந்திரங்களின் தலை சிறந்த ஓதுவார்கள், மற்றும் வேத நியமங்களை உறுதியாகப் பின்பற்றுபவர்கள் ஆகியோர் தங்களது தலை சிறந்த பண்புகளை பகவானின் தொண்டிற்காக அர்ப்பணிக்காமல் எவ்வித நற்பயனையும் அடைய முடியாது என்பதால், அந்த சர்வமங்களம் பொருந்திய பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் நான் மென்மேலும் எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.
பதம் 18
மொழிபெயர்ப்பு
கிராத, ஹுண, ஆந்ர, புலிந்த, புல்கச, ஆபீர, சும்ப, யவன, கச இனங்களை சேர்ந்தவர்களும், பாவச் செயல்களில் பற்றுக் கொண்டுள்ள மற்றவர்களும் கூட சர்வ வல்லமை படைத்த பகவானின் பக்தர்களிடம் தஞ்சமடைவதால், தூய்மையடைய முடியும். அந்த பகவானிடம் எனது தாழ்மையான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.
பதம் 19
மொழிபெயர்ப்பு
முக்தி பெற்ற எல்லா ஆத்மாக்களுக்கும் அவரே பரமாத்மாவாகவும், பரமபுருஷராகவும் உள்ளார். வேதங்கள், தர்ம சாஸ்திரங்கள் மற்றும் தவம் ஆகியவற்றின் உருவமாக இருப்பவரும் அவரே. அவர் பிரம்ம தேவர், சிவபெருமான் மற்றும் எல்லா வித போலிப் பகட்டுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் ஆகியோரால் துதிக்கப்படுகிறார். பெரும் பய பக்தியுடன் பூஜிக்கப்படுபவரான அப்பரமபுருஅர் என்னிடம் தயவு காட்டுவாராக.
பதம் 20
மொழிபெயர்ப்பு
பக்தர்களின் வழிபாட்டுக்குரியவரும், யது வம்சத்தைச் சேர்ந்த அந்தக மற்றும் வ்ருஷ்ணியைப் போன்ற அரசர்களைக் காப்பவரும், அவர்களால் போற்றப்படுபவரும், எல்லா லக்ஷ்மி தேவிகளுக்கும் கணவரும், எல்லா யாகங்களையும் நிர்வகித்து அனைத்து ஜீவராசிகளுக்கும் வழிகாட்டியாய் இருப்பவரும், எல்லா புத்தியையும் ஆள்பவரும், ஆன்மீக மற்றும் ஜட உலகங்கள் அனைத்திற்கும் உரிமையாளரும், மேலும் மண்ணுலகில் தோன்றிய மிகச் சிறந்த அவதாரியுமான (அனைவரிலும் பரமமான) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் என்மீது கருணை கொள்வாராக.
பதம் 21
மொழிபெயர்ப்பு
முழுமுதற் கடவுளான ஸ்ரீகிருஷ்ணரே முக்தியளிப்பவராவார். அதிகாரபூர்வமானவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, ஒவ்வொரு வினாடியும் அவரது தாமரைப் பாதங்களை நினைவிற் கொள்வதன் மூலமாக, சமாதியில் ஆழ்ந்துள்ள பக்தர்களால் வரம்பற்ற பரம புருஷரை காண முடிகிறது. ஆயினும் கற்றறிந்த மனக்கற்பனையாளர்கள் தங்களுடைய சலன சித்தத்திற்கேற்ப அவரைப் பற்றி எண்ணுகின்றனர். பெருமான் என்னிடம் கருணை கொள்வாராக.
பதம் 22
மொழிபெயர்ப்பு
படைப்பின் ஆரம்பத்தில் பிரம்மாவின் சக்தி வாய்ந்த அறிவை அவரது இதயத்திலிருந்து கொண்டு பெருகச் செய்து, படைப்பைப் பற்றியதும், தம்மைப் பற்றியதுமான முழு அறிவை அவருள்ளே எழச் செய்தவரும், பிரம்மனின் வாயிலிருந்து படைக்கப்பட்டதைப் போல் காணப்பட்டவருமான பகவான் என்னிடம் கருணை கொள்வாராக.
பதம் 23
மொழிபெயர்ப்பு
பரமபுருஷ பகவான் பிரபஞ்சத்தினுள் சயனிப்பதன் வாயிலாக, மூலப் பொருட்களைக் கொண்டு படைக்கப்பட்டுள்ள ஜட உடல்களை இயக்குகிறார். பதினாறு பிரிவுகளைக் கொண்ட ஜடக் குணங்கள் அவரது படைக்கும் கருவிகளாக உள்ளன. மேலும் தமது புருஷ அவதாரத்தில் தோன்றும் பகவான், ஜடக் குணங்களின் இப்பதினாறு பிரிவுகளிடம் ஜீவராசி கட்டுப்பட்டுக் கிடக்குமாறு செய்கிறார். அந்த முழுமுதற் கடவுள் கருணை கூர்ந்து எனது கூற்றுக்களைக் கௌரவிப்பாராக.
Comments
Post a Comment