தேங்காய் பர்பி
தேவையான பொருட்கள்
******************************
தேங்காய் துருவல் - 1 கப் (நன்கு அழுத்தியது)
சர்க்கரை - 1 கப் (200 கிராம்)
ஏலக்காய் - 4 (பொடி செய்தது)
முந்திரி, பாதாம் - தலா 1 தேக்கரண்டி (பொடியாக சீவியது)
நெய் - 1 தேக்கரண்டி (வறுக்க)\
செய்முறை
*********************
1. முதலில் தேங்காய்த் துருவலை லேசாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
2. அரை கப் தண்ணீரில் சர்க்கரையைக் கொட்டி அடுப்பில் வைத்து கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.
3. பதம் வந்ததும் தேங்காய்த் துருவலைக் கொட்டி கிளறவும்.
4. நன்றாக கிளறி கெட்டி பதம் வந்ததும், வாணலியில் ஒட்டாமல் வரும் போது, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்
5. ஒரு தட்டில் நெய் தடவி, தேங்காய் கலவையை அதில் கொட்டி பரப்பி ஆற வைக்கவும்.
6. ஒரு தேக்கரண்டி நெய்யில் சீவிய முந்திரி, பாதாமை போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் கொட்டிய தேங்காய் கலவையில் கொட்டி லேசாக அழுத்தி விடவும்.
7. லேசாக சூடு ஆறியதும் கத்தியால் விருப்பமான வடிவில் வில்லைகளாக போட்டு நன்கு ஆற விடவும்.
குறிப்பு
****************
1. அடுப்பில் தொடர்ச்சியாக விடாமல் கிளற வேண்டும் இல்லையெனில் அடிபிடித்துவிடும்.
2. கம்பி பாகு என்பது சர்க்கரைப் பாகை ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலினால் எடுத்து விரலைப் பிரித்தால், இரு விரல்களுக்கிடையே ஒரு கம்பி போல் வரும்.
3. பாகு பதம் தாண்டி விட்டால் பர்பி மிகவும் கெட்டியாகி விடும்.
4. தேங்காய்த் துருவலை வறுத்துப் போடுவதால் பர்பி சீக்கிரம் கெட்டுப் போகாது.
Comments
Post a Comment