ஆதாரம் : பத்ம புராணம்
வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
அஸ்வத்த விருக்ஷ்ம் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் ஒரு அம்சம் என்று சொல்லப்படுகிறது. ஞானிகள் அதை அஸ்வத்த நாராயணன் என்று நாராயண ரூபமாகவே கருதித் தியானம் செய்தார்கள். அதை விளக்கும் கதை ஒன்றைச் சொல்லுகிறேன் கேளுங்கள் என்று சூத கோஸ்வாமி முனிவர்களிடம் கூறினார்.
முற்னொரு காலத்தில் சௌராஷ்டிர தேசத்தில் தனஞ்ஜெயன் என்ற பிராமணர் இருந்தார். அவர் மனைவியின் பெயர் சுசீலை. மிகவும் தரித்திர நிலையில் இருந்ததால் தனஞ்ஜெயன் நாள் தோறும் யாசகம் செய்து அவருக்கு கிடைக்கும் தானியத்தைக் கொண்டு அவர்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர். தனஞ்ஜெயன் ஒருநாள் யாசகத்திற்கு செல்லாவிட்டால் அன்று அவரும் அவருடைய மனைவியும் பட்டினி கிடக்கத்தான் வேண்டும். இந்த பரம தரித்திர நிலைமை தீர வேண்டுமென்று அவருடைய மனைவி நாள்தோறும் அவர்கள் வீட்டிற்குப் பின்னால் உள்ள அரச மரத்தைச் சுற்றி வந்து பிரார்த்தனை செய்வது வழக்கம்.
இவ்வாறு இருக்கையில் கோடை கழிந்து குளிர் காலம் வந்தது வழக்கத்திற்கு மாறாக அந்த வருடம் மழையும், குளிரும் மிக அதிகமாக இருந்தது. உடலை முடுவதற்கே சரியான உடைகள் இல்லாத நிலையில் அந்த பிராமணரும் அவரது மனைவியும் குளிரால் நடுங்கி மிகவும் துன்புற்றார்கள். அதற்கு மேலும் குளிரைத் தாங்க முடியாத நிலையில் அடுப்பை மூட்டிக் குளிர் காயலாம் என்று நினைத்தார்கள்.
அடுப்பை மூட்டுவதற்கு சுள்ளிகள் வேண்டுமே? பிராமணர் கோடாரியை எடுத்துக் கொண்டுபோய் தன் வீட்டுக் கொல்லைப் புரத்தில் இருந்த அரச மரத்தின் கிளையை வெட்டினார். உடனே அந்த அரச மரத்தின் கிளையிலிருந்து ரத்தம் வடிவதைக் கண்டு திடுக்கிட்டுப்போய் கோடாரியைக் கீழே போட்டுவிட்டுக் கை கூப்பியயடி நின்றார், சற்று நேரத்தில் சங்கு, சக்கரம் ஏந்திய ஒரு திவ்ய புருஷன் அங்கே தோன்றியதைக் கண்டார். அவர் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டிருந்தது அதிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பிராமணர் மேலும் திகைப்படைந்தவராக "ஸ்வாமி இது என்ன கொடுமை சர்வலோக நாயகனான உங்கள் உடம்பிலிருந்து ரத்தம் வடியக் காரணமென்ன? உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது யார்?" என்று பிராமணர் கேட்டார்.
'ஓ பிராமணரே நீர் தான் என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கினீர்.. சற்று முன் நீர் என்னைக் கோடாரியால் வெட்ட விலலையா?" என்று அம்மகா புருஷன் கேட்டார்.
பிராமணர் திடுக்கிட்டவராக, தேவ தேவா, நான் மரத்தைத் தானே வெட்டினேன். உங்களை நான் இதற்கு முன் பார்த்ததேயில்லையே?" என்று பதறினான்.
நீர் என்னை பார்க்கவிட்டாலும் நான் உம்மை பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன். என்னை அஸ்வத்த ரூபன் என்றும் அஸ்வத்த நாராயணன் என்றும் ஞானிகள் அழைப்பார்கள். நாள் தோறும் உன் மனைவி என்னைச் சுற்றி வந்து பிரார்த்தனை செய்து கொண்டதால்தான் இன்று உம்முன் காட்சியளித்தேன்" என்று கூறினார்
பிராமணர் கண்ணீர் பெருகியவராக, - என்னைவிட என் மனைவி மிகவும் புண்ணியம் செய்தவள் அவள் நாள் தோறும் உம்மை தொழுது வந்திருக்கிறாள். ஆனால் நானோ உங்களை கோடாரியால் வெட்டிய கொடுமையை செய்தேன். எனக்கு நீங்கள் காட்சியளித்தது விந்தையிலும் விந்தையல்லவா? பிரபுவே, என்னை மன்னித்துவிடுங்கள். உங்களைத் தவிர எனக்கு வேறு கதியில்லை" என்று அழுதார்.
பகவான் அஸ்வத்த நாராயணர் இளநகை புரிந்தபடி, "பக்தனே, உம்முடைய அவல நிலையைப் போக்குவதற்காகத் தான் உம் முன் தோன்றினேன். உமக்கு வேண்டிய வரத்தைக் கேட்டுப் பெற்று கொள்ளுங்கள்" என்று கூறினார்.
பிராமணர் கைகூப்பி வணங்கியவனாக, "பகவானே, என்றும் உங்களை மறவாத நிலை வேண்டும் உங்களுடைய திவ்யமான பாத சேவையைத் தவிர எனக்கு வேறொன்றும் வேண்டியதில்லை எனறார்.
பகவான் அவனுக்கு சகல ஐஸ்வரியங்களும் உண்டாகச் செய்தார். அக்கணமே அவன் வசித்த குடிசை அழகிய மாளிகையாயிற்று. புத்தாடைகளும், பொன் ஆபரணங்களும் இன்னும் சகல வசதிகளும் ஏற்பட்டு விட்டன. அதன் பின் பிராமணருனம் அவர் மனைவியும் நெடுங்காலமாக சகல சுகபோகங்களுடன் வாழ்ந்திருந்து பலவித தான தர்மங்களைச் செய்து மோகஷ லோகத்தை அடைந்தார்கள்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற கதைகளை படிக்க கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
https://suddhabhaktitamil.blogspot.com/
https://t.me/joinchat/HIm4JGufgEgG7jwI
Comments
Post a Comment