🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
விஷ்ணுபிரியாதேவி அவதார தினம்
வழங்கியவர் :- ஜீவன கெளரஹரி தாஸ்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒருநாள் அன்னை ஸச்சிதேவி ராஜ பண்டிதரான ஸநாதன மிஸ்ரரின் மகளான விஷ்ணுபிரியாவை தமது மகனுக்கு மணமுடிக்கும் விருப்பத்தை காசிநாத பண்டிதரிடம் தெரிவித்தார். காசிநாத பண்டிதர் உடனடியாக ஸநாதன மிஸ்ரரை அணுகி அவரது மகளை நிமாயிக்கு மணமுடிக்க முன்மொழிந்தார். நிமாய் பண்டிதரின் புகழை நன்கறிந்த ஸநாதன மிஸ்ரர் திருமணத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளித்தார்.
இச்செய்தியைக் கேட்டு நிமாய் பண்டிதரின் அண்டை வீட்டுக்காரரான புத்திமந்தகான் திருமணத்திற்கான மொத்த செலவையும் தாமே ஏற்பதாகவும், திருமணத்தை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யலாம் என்றும் தெரிவித்தார்.
நிமாய்-விஷ்ணுபிரியா திருமணம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
நிமாய்-விஷ்ணுபிரியா திருமணம் தேவலோகவாசிகளையே வியப்பூட்டும் வகையில் ஆடம்பரமாக அமைந்தது. லக்ஷ்மிபிரியா திருமணத்தைப் போல இத்திருமணத்திலும் தேவர்கள் மனித ரூபத்தில் கலந்து கொண்டனர். பிராமணர்கள் வேத மந்திரங்களை ஓத, நிமாய் வைஷ்ணவர்களின் மத்தியில் கம்பீரமாக அமர்ந்திருந்தார். யோக மாயையின் சக்தியினால் நவத்வீப மக்கள் கிருஷ்ண பிரேமையில் முழுமையாக மூழ்கி மற்றவர்களை அடையாளம் காணாத அளவிற்கு பரவச நிலையை அடைந்தனர்.
இத்திருமணத்தில் கலந்து கொண்ட இலட்சக்கணக்கான விருந்தினர்களுக்கும் சந்தனம் மற்றும் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. ஹரியின் நாமம் நவத்வீபம் முழுவதும் விண்ணைப் பிளக்கும் அளவிற்கு ஒலித்தது. திருமண நிகழ்ச்சியில் அனைவருக்கும் பல வகையான உணவு பதார்த்தங்கள் வர்ணிக்க முடியாத அளவிற்கு பரிமாறப்பட்டன. பெண்கள் மங்கலகரமான பஜனை பாடல்களைப் பாடி ஆடி கெளராங்கரை மகிழ்வித்தனர். தேவர்கள் மலர்மாரி பொழிய, வாத்தியங்கள் ஒலி எழுப்ப, நடன கலைஞர்கள் நடனமாட, ஹரி நாமம் அனைவரின் காதுகளிலும் ஒலித்துக் கொண்டே இருந்தது. நவத்வீபத்தில் இருந்த அனைத்து குழந்தைகளும் நாம ஸங்கீர்த்தனத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
நவத்வீப மக்களின் பரவசம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
சைதன்ய மஹாபிரபுவும் விஷ்ணுபிரியாவும் ஒரே பல்லக்கில் அமர வைக்கப்பட்டு கங்கை நதிக்கரையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட தருணத்தில், மலர்கள் கங்கை நீரை (கண்களுக்கெட்டிய தூரம் வரை) அலங்கரித்துக் கொண்டிருந்தன. இம்மாதிரியான ஆடம்பர திருமணத்தை இதற்கு முன் கண்டதில்லை என நவத்வீப மக்கள் பேசிக் கொண்டனர். கிருஷ்ணரின் மனைவியான சத்யபாமா சைதன்ய மஹாபிரபுவின் லீலையில் விஷ்ணுபிரியாவாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இவர்கள் இருவரின் அழகைப் பார்த்தவர்கள், ரதி-காமதேவன், ஸச்சி-இந்திரன், சீதா-இராமர், பார்வதி-சிவபெருமான், லக்ஷ்மி-நாராயணர் ஆகியோரைப் போன்று தோற்றமளிப்பதாக வர்ணித்தனர். நவத்வீப மக்கள் அனுபவித்த பரவசத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என சைதன்ய பாகவதத்தை இயற்றிய விருந்தாவன தாஸ தாகூர் பணிவுடன் தெரிவிக்கிறார். நவத்வீப மக்கள் சைதன்ய மஹாபிரபுவின் புகழ், அழகு, திருமண வைபவங்கள் முதலிய லீலைகளில் முழுமையாக மூழ்கியிருந்ததால் அனைவரும் இயற்கையாகவே முக்தியின் நிலையை வெளிப்படுத்தினர். சைதன்ய மஹாபிரபுவின் தெய்வீகத் திருமண லீலையில் மூழ்குவதால் கிடைக்கக்கூடிய கிருஷ்ண பிரேமையை நவத்வீப மக்கள் மற்றவர்களுக்கும் விநியோகம் செய்தனர்.
விஷ்ணுபிரியாவின் தீவிர பக்தி
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
விஷ்ணுபிரியா எந்நேரத்திலும் சைதன்ய மஹாபிரபுவிற்கு சேவை செய்வதில் மிகவும் விழிப்புடன் இருந்தாள். விஷ்ணுபிரியாவின் தீவிர பக்தி அன்னை ஸச்சிதேவியை மெய்சிலிர்க்க வைத்தது. விஷ்ணுபிரியாவின் பதிவிரதத்திற்கு அவர்களது இல்லத்து சேவகர்களான வம்சிவதன தாகூரும், ஈஷான தாகூரும் பெரும் துணையாக இருந்தனர். சைதன்ய மஹாபிரபு கயாவிற்கு பயணம்செய்து தமது குருவான ஈஸ்வர புரியிடம் தீக்ஷை பெற்ற பிறகு அவரது செயல்களில் கடலளவு மாற்றம் தென்பட்டது.
அவர் எப்போதும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்தபடி, கிருஷ்ண பிரேமையில் மூழ்கியவராகக் காணப்பட்டார். நவத்வீபத்தின் இதர வைஷ்ணவர்களுடன் இணைந்து ஹரி நாம ஸங்கீர்த்தனத்தை எல்லா இடங்களிலும் பரப்பத் தொடங்கினார். கலி யுக ஆத்மாக்களை விடுவிப்பதற்கான பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டார், விஷ்ணுபிரியா அவருக்கு பல்வேறு வழிகளில் உதவி புரிந்தாள்.
சைதன்யரின் சந்நியாசம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
சைதன்ய மஹாபிரபு தமது இருபத்துநான்காவது வயதில் சந்நியாசம் பூண்டபோது விஷ்ணுபிரியாவின் வயது 16. விஷ்ணுபிரியா பூமியில் 96 வருடம் லீலை புரிந்தாள். அதில் 80 வருடம் பிரிவில் பக்தி செய்யக்கூடிய உயர்ந்த சித்தாந்தத்தை உலக மக்களுக்கு எடுத்துக்காட்டினாள். சந்நியாசம் ஏற்ற பிறகு சைதன்ய மஹாபிரபு நாம ஸங்கீர்த்தன இயக்கத்தை பெரிய அளவில் தொடங்கினார். விஷ்ணுபிரியாவின் தியாக உணர்வே கிருஷ்ண பக்தி இயக்கம் பரவுவதற்கு அடித்தளமாக அமைந்தது.
விஷ்ணுபிரியாவினால் வழிபடப்பட்ட சைதன்ய மஹாபிரபுவின் விக்ரஹத்தினை இன்றும் நவத்வீபத்திலுள்ள தாமேஸ்வரர் கோயிலில் காணலாம்.
சைதன்ய மஹாபிரபுவின் இந்த திருமண வைபவங்களை தியானிப்பதன் மூலம் ஒருவர் எளிதாக பெளதிக பந்தத்திலிருந்து விடுபடலாம்.
"இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com"
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment