🍁🍁🍁🍁🍁🍁
தத: கலௌ ஸம்ப்ரவ்ருத்தே ஸம்மோஹாய ஸுர த்விஷாம்
புத்தோ நாம்னாஞ்ஜன-ஸுத:கீகடேஷு பவிஷ்யதி
தத—அதன் பிறகு; கலௌ—கலி யுகம்; ஸம்ப்ரவ்ருத்தே—விளைந்ததால்; ஸம்மோஹாய—ஏமாற்றும் நோக்கத்திற்காக; ஸுர—ஆத்திகர்கள்; த்விஷாம்—பொறாமை கொண்டவர்கள்; புத்த:—பகவான் புத்தர்; நாம்னா—எனும் பெயர் கொண்ட; அஞ்சன-ஸுத:—அவரது தாயார் அஞ்சனையாவார்; கீகடேஷு—கயா (பீகார்) மாநிலத்தில்; பவிஷ்யதி—நிகழும்.
மொழிபெயர்ப்பு
🍁🍁🍁🍁🍁🍁🍁
பிறகு, கலி யுக ஆரம்பத்தில், கயா மாநிலத்தில், அஞ்சனாவின் புதல்வராக புத்த பகவான் தோன்றுவார். நம்பிக்கையுள்ள ஆஸ்திகர்களிடம் பொறாமை கொண்டவர்களை தந்திரமாக வழிப்படுத்துவதே அவருடைய அவதார நோக்கமாகும்.
பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁
முழுமுதற் கடவுளின் ஒரு சக்தி வாய்ந்த அவதாரமான பகவான் புத்தர், அஞ்சனா தேவியின் புதல்வராக கயா (பீகார்) மாநிலத்தில் தோன்றினார். அவர் தமது சொந்த கருத்தான அகிம்சையைப் பிரசாரம் செய்து, வேதங்களில் அனுமதிக்கப்பட்ட மிருக பலியையும் கூட நிராகரித்தார். புத்த பகவான் தோன்றிய சமயத்தில், மக்கள் பொதுவாக நாஸ்திகத் தன்மை கொண்டவர்களாகவும், மிருக மாமிசத்தை விரும்பி உண்பவர்களாகவும் இருந்தனர். யாக பலி என்ற பெயரில், கிட்டத்தட்ட ஒவ்வொரு இடமும் ஒரு கசாப்புக் கூடமாக மாற்றப்பட்டு இருந்தது. மேலும் மக்கள் மிருக பலியில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஈடுபட்டனர். நிராதரவான மிருகங்களின் மீது இரக்கம் கொண்ட புத்த பகவான் அகிம்சையை பிரசாரம் செய்தார். வேதக் கொள்கையில் தமக்கு நம்பிக்கையில்லை என்பதை அவர் வலியுறுத்தினார். மிருகவதையால் நேரிடும் தீய விளைவுகளையும் அவர் வலியுறுத்தினார். கடவுள் நம்பிக்கை அற்றவர்களான, குறைந்த அறிவுள்ள கலி யுக மக்கள் அவரது கொள்கையைப் பின்பற்றினர். மேலும் இடைக் காலத்தில் அவர்கள் நல்ல ஒழுக்கத்திலும், அகிம்சையிலும் பயிற்றுவிக்கப்பட்டனர். இது பகவானை உணரும் பாதையில் தொடர்ந்து முன்னேறுவதற்கான ஆரம்பப்படியாகும். நாஸ்திகர்களை அவர் ஏமாற்றினார். ஏனெனில் அவரது கொள்கைகளைப் பின்பற்றிய அத்தகைய நாஸ்திகர்கள் கடவுளை நம்பவில்லை. ஆனால் தங்களது பரிபூரண நம்பிக்கையை அவர்கள் புத்த பகவானிடம் கொண்டிருந்தனர். புத்தர் பகவானுடைய அவதாரம் என்பதால், பகவான் புத்தரின் வடிவிலுள்ள கடவுளிடம், நம்பிக்கை இல்லாதவர்கள் நம்பிக்கை கொள்ளும்படி மாற்றப்பட்டனர். அதுவே புத்த பகவானின் கருணையாகும். அவர் நம்பிக்கையற்றவர்களை தம்மிடம் நம்பிக்கை கொள்ளும்படி செய்தார்.
புத்த பகவானின் அவதாரத்திற்கு முன்பு மிருகங்களைக் கொல்வதே சமுதாயத்தின் மிகவும் முக்கியமான செயலாக இருந்து வந்தது. மக்கள் இவற்றை வேத பலிகள் என கூறிக் கொண்டனர். அதிகாரப்பூர்வமான சீடப் பரம்பரையின் வாயிலாக வேதங்கள் ஏற்றுக் கொள்ளப்படாத போது, தற்செயலாக வேதங்களைப் படிப்பவர்கள், மலர் மொழியால் வழிதவறிச் செல்கின்றனர். அத்தகைய மூட பண்டிதர்களைப் பற்றிய ஒரு விளக்கம் பகவத் கீதையில் உள்ளது (அவிபஸ்சித:). தெய்வீகமான செய்தியை, உணர்ந்தறியப்பட்ட சீடப் பரம்பரையின் ஆன்மீக பக்தர்களிடமிருந்து பெறுவதில் அக்கறை கொள்ளாமல், வேத இலக்கியங்களைப் பயிலும் மூட பண்டிதர்கள் குழப்பமடைவது உறுதி. அவர்கள் சமயச் சடங்குகளே அனைத்தும் என்று கருதுகின்றனர். அவர்களுக்கு ஆழ்ந்த அறிவு இல்லை. பகவத் கீதையின்படி (15.15), ‘வேதைஸ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்ய:’ வேதங்களில் உள்ள எல்லா முறைகளும் ஒருவரை படிப்படியாக பரம புருஷரை அடையும் பாதையை நோக்கி அழைத்துச் செல்பவையாக உள்ளன. பரம புருஷர் தனிப்பட்ட ஆத்மா, பிரபஞ்ச சூழ்நிலை மற்றும் இவற்றிற்கு இடையிலுள்ள உறவு ஆகியவற்றை அறிவதே வேத இலக்கியத்தின் முழு நோக்கமாகும். உறவு அறியப்பட்டவுடன் அது செயற்படத் துவங்குகின்றது. அத்தகைய செயலின் பலனாக, பகவானிடம் திரும்பிச் செல்லுதல் எனும் வாழ்வின் இறுதி நோக்கம் மிகச்சுலபமாக நிறைவேறுகின்றது. துரதிர்ஷ்டவசமாக, அங்கீகரிக்கப்படாத வேதப் பண்டிதர்கள் தூய்மை அடைவதற்குரிய சடங்குகளால் மட்டுமே கவரப்படுபவர்களாக உள்ளனர். இதனால் இயற்கையான முன்னேற்றம் தடைப்படுகின்றது.
நாஸ்திகத் தன்மை கொண்ட அத்தகைய குழப்பமடைந்த மக்களுக்கு புத்த பகவான் இறை நம்பிக்கையின் சின்னமாக விளங்குகிறார். ஆகவே முதலாவதாக அவர் மிருகங்களைக் கொள்ளும் பழக்கத்தைத் தடுக்க விரும்பினார். பகவானிடம் திரும்பிச் செல்லும் வழியில் மிருகங்களைக் கொல்பவர்கள் ஆபத்தான பேர் வழிகளாக உள்ளனர். ஆத்மா சில சமயங்களில் “மிருகம்” அல்லது ஜீவராசி என்று அழைக்கப்படுகிறது. ஆகவே, மிருக வதை செய்பவர்கள், மற்றும் ஆத்மாவின் தனித்தன்மையை இழந்தவர்கள் ஆகிய இருவருமே மிருகவதை புரிந்தவர்களாவர்.
மிருகங்களைக் கொல்பவர்களால் பரம புருஷரின் உன்னத செய்தியை சுவைத்து அனுபவிக்க முடியாது என்று பரீட்சித்து மகாராஜர் கூறினார். ஆகவே பகவானை அடையும் வழியில் மக்களை பயிற்றுவிக்க வேண்டுமானால், முதலில் அவர்களுக்கு மேலே கூறியவாறு மிருக வதையைக் கைவிடுமாறு கற்பிக்க வேண்டும். ஆன்மீகத் தன்னுணர்வு பெறுவதற்கும், மிருகவதைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறுவது புத்திகெட்டதனமாகும். கலி யுகத்தின் கோளாறினால் ஆபத்தான இந்த தத்துவத்தை ஆதரிக்கும் பெயரளவேயான சந்நியாசிகள் பலர் முளைத்துள்ளனர். வேதங்களின் பெயரில் இவர்கள் மிருகவதையைப் பிரசாரம் செய்கின்றனர். பகவான் ஸ்ரீ சைதன்யருக்கும், மௌலானா சந்த்காஜி சாகிப் என்பவருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலில் இவ்விஷயம் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு உள்ளது. வேதங்களில் கூறப்பட்டுள்ள மிருக பலியானது, கசாப்பு கூடத்தில் நிகழும் கட்டுபாடற்ற மிருகவதையிலிருந்து வேறுபட்டதாகும். அசுரர்கள் அல்லது பெயரளவேயான வேதப் பண்டிதர்கள் வேதங்களில் உள்ள மிருக பலியை ஆதாரமாகக் காட்டுவதால், புத்த பகவான் வேதங்களின் அதிகாரத்தை போலியாக மறுத்துள்ளார். மிருகவதை எனும் துர்க்குணத்திலிருந்து மக்களைக் காக்கவும், உலகளாவிய சகோதரத்துவம், அமைதி, நேர்மை மற்றும் சமத்துவம் ஆகியவற்றைப் பற்றி கூச்சலிடும் மூத்த சகோதரர்களால் நிராதரவான மிருகங்கள் கொல்லப்படுவதை நிறுத்தவுமே பகவான் புத்தர் வேதங்களை ஏற்க மறுத்தார். மிருகவதை இருக்கும்போது நீதி இருக்காது. பகவான் புத்தர் அதை முற்றிலும் நிறுத்திவிட விரும்பினார். இதனால்தான் அவரது அகிம்சைக் கொள்கை இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கூட பரப்பப்பட்டது.
பொதுவாக பகவான் புத்தரின் தத்துவம் நாஸ்திகம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், அது பரம புருஷரை ஏற்கவில்லை என்பதுடன் அந்த தத்துவ முறை வேதங்களின் அதிகாரத்தையும் ஏற்கவில்லை. ஆனால் அது உண்மை நிலையை மறைக்க பகவானால் கையாளப்பட்ட ஒரு சாதனமாகும். ஆனால் புத்தர் பகவானின் ஓர் அவதாரம் என்பதால், அவரே வேத அறிவை ஸ்தாபித்த மூல புருஷராவார். ஆகவே, வேத தத்துவத்தை அவரால் விலக்கிவிட முடியாது. ஆனால் மேலெழுந்தவாரியாக அதை அவர் விலக்கினார். ஏனெனில், ‘ஸுர-த்விஷர்கள்’, அல்லது பகவத் பக்தர்களிடம் எப்பொழுதும் விரோதம் கொண்டுள்ள அசுரர்கள், வேதங்களை சான்றாகக் கொண்டு பசுவதை அல்லது மிருகவதையை ஆதரிக்க முயல்கின்றனர். இது நவீன காலத்து சந்நியாசிகளால் இப்போது செய்யப்பட்டு வருகின்றது. பகவான் புத்தர் வேதங்களின் அதிகாரத்தை முற்றிலும் மறுக்க வேண்டியிருந்தது. காரணத்தோடுதான் அவர் இப்படிச் செய்தார். இல்லையெனில் அவர் பகவானின் அவதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கமாட்டார். அல்லது ஒரு வைஷ்ணவ ஆச்சாரியரான, ஜெயதேவரின் தெய்வீகமான பாடல்களால் அவர் துதிக்கப்பட்டிருக்கவும் மாட்டார். பகவான் புத்தர் வேதங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக, காலத்திற்கும் பொருந்தும் வகையில், வேதங்களின் ஆரம்ப நிலையிலுள்ள கொள்கைகளை பிரசாரம் செய்தார். (சங்கராச்சாரியரும் கூட அவ்வாறுதான் செய்தார்). ஆகவே புத்த பகவான் மற்றும் சங்கராச்சாரியர் ஆகிய இருவருமே தெய்வ நம்பிக்கைக்கு வழியமைத்தனர். மேலும் வைஷ்ணவ ஆச்சாரியர்கள், குறிப்பாக பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, முக்தியடையும் தன்னுணர்வுப் பாதையில் மக்களை வழிநடத்திச் சென்றனர்.
பகவான் புத்தரின் அகிம்சை இயக்கத்தில் மக்கள் ஆர்வம் காட்டுவது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இவ்விஷயம் மிகவும் முக்கியமானதென கருதி, கசாப்புக் கூடங்களை அவர்கள் முற்றிலும் மூடிவிடுவார்களா? இல்லையெனில், அகிம்சைக் கொள்கையில் (இயக்கத்தில்) அர்த்தமில்லை.
கலி யுகம் துவங்குவதற்கு (ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்) சற்று முன்புதான் ஸ்ரீமத் பாகவதம் தொகுக்கப்பட்டது. மேலும் புத்த பகவான் ஏறக்குறைய இருபத்தாறு நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றினார். எனினும் ஸ்ரீமத் பாகவதத்தில் புத்த பகவானைப் பற்றி முன்னதாகவே கூறப்பட்டுள்ளது. அதுவே இந்த சாஸ்திரத்தின் ஆதாரமாகும். இத்தகைய முன்னறிவிப்புகள் பல உள்ளன. அவை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஸ்ரீமத் பாகவதத்தின் ஆதாரப்பூர்வமான நிலையையே அவை சுட்டிக்காட்டப்போகின்றன. எல்லா பந்தப்பட்ட ஆத்மாக்களிடமும் உள்ள தவறு, மாயை, பொய் மற்றும் பூரணமற்ற நிலை ஆகிய இந்நான்கு குறைபாடுகளும் ஸ்ரீமத் பாகவதத்தில் இல்லாதவையாகும். முக்தி பெற்ற ஆத்மாக்கள் இக்குறைகளுக்கு அப்பாற்பட்டவர்களாவர். ஆகவே, அவர்களால் எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கண்டு அதை முன்கூட்டியே அறிவிக்க முடியும்.
ஸ்ரீமத்-பாகவதம்-முதல்-காண்டம் / அத்தியாயம் மூன்று / பதம் 24
Comments
Post a Comment