சதுர்-விதா பஜந்தே மாம்
ஜனா: ஸுக்ருதினோ (அ)ர்ஜுன
ஆர்தோ ஜிக்ஞாஸுர் அர்தார்தீ
க்ஞானி ச பரதர்ஷப
மொழிபெயர்ப்பு
பரதர்களில் சிறந்தவனே, நான்கு விதமான நல்லோர் எனக்குத் தொண்டு புரிகின்றனர்— துயருற்றோர், செல்வத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், பூரணத்தின் அறிவைத் தேடுவோர் என்பவர் அவர்கள்.
பொருளுரை
துஷ்டர்களுக்கு எதிர்மாறான நல்லோர் (அறநெறிகளைப் பின்பற்றுவோர்), ஸுக்ருதினர் என்று அழைக்கப்படுகின்றனர். சாஸ்திரங்களின் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படியும் இவர்கள், நீதி மற்றும் சமூகச் சட்டங்களைக் கடைப்பிடித்து, பெரும்பாலும் முழுமுதற் கடவுளுக்கு பக்தி செய்பவர்களாவர். இவர்களில் நான்கு வகையினர் உண்டு—துயரத்தில் இருப்போர், பணத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், பூரண உண்மையின் அறிவைத் தேடுவோர். பல்வேறு சூழ்நிலைகளின் காரணத்தினால் இத்தகையோர் முழுமுதற் கடவுளுக்கு பக்தித் தொண்டாற்ற வருகின்றனர். தங்களது பக்தித் தொண்டின் மூலம் சில விருப்பங்களைப் பூர்த்தி செய்ய விரும்புவதால், இவர்கள் தூய பக்தர்கள் அல்ல. தூய பக்தித்தொன்டு ஜட இலாபத்திற்கான எவ்வித ஆசைகளும் இல்லாதது. பக்தி ரஸாம்ருத ஸிந்து (1.1.11) தூய பக்தியினை பின்வருமாறு விவரிக்கின்றது:
அன்யாபிலாஷிதா-ஷூன்யம்
க்ஞான -கர்மாத்- யனாவ்ருதம்
ஆனுகூல்யேன க்ருஷ்ணானு-
ஷீலனம் பக்திர் உத்தமா
“பரம புருஷரான ஸ்ரீ கிருஷ்ணருக்கு, சாதகமான முறையில், எவ்வித இலாபத்தையும் எதிர்பார்க்காமல், பலன் நோக்குச் செயல்கள், தத்துவ கற்பனைகள் ஏதுமின்றி, திவ்யமான அன்புடன் தொண்டாற்ற வேண்டும். இதுவே தூய பக்தித் தொண்டு எனப்படுகிறது.”
பக்தித் தொண்டிற்காக முழுமுதற் கடவுளை அணுகும் இந்த நான்கு வித நபர்கள், தூய பக்தர்களின் உறவினால் தூய்மையடைந்து, தாங்களும் தூய பக்தர்களாகி விடுகின்றனர். ஆனால் துஷ்டர்களைப் பொறுத்தவரையில், பக்தித் தொண்டு அவர்களுக்கு மிகவும் கடினமானது; ஏனெனில், அவர்களது வாழ்க்கை ஆன்மீக நோக்கங்கள் அற்றதும், நெறியற்றதும் சுயநலம் மிக்கதுமாகும். ஆனால் அவர்களில் சிலரும்கூட, தூய பக்தரது உறவைப் பெறும் நல்வாய்ப்பைப் பெற்றால், தூய பக்தராகி விட முடியும்.
பலன்நோக்குச் செயல்களின் எப்போதும் மும்முரமாக இருப்போர். ஜட வாழ்வில் துன்பங்களை அடையும்போது கடவுளிடம் வருகின்றனர். அச்சமயத்தில் தூய பக்தருடன் தொடர்பு கொள்வதன் மூலம், இவர்களும் இறைவனின் பக்தர்கள் ஆகின்றனர். சில சமயங்களில், வாழ்வில் வெறுப்புற்றவர்கள், தூய பக்தருடன் உறவு கொண்டு கடவுளைப் பற்றி அறிவதில் ஆர்வம் கொள்கின்றனர். அதுபோல வறட்டு தத்துவவாதிகளும் தங்களது எல்லா அறிவுத் துறைகளிலும் வெறுப்புற்று, சில சமயங்களில் கடவுளைப் பற்றி அறிய விரும்பி, பக்தியுடன் தொண்டாற்றுவதற்காக முழுமுதற் கடவுளை வந்தடைகின்றனர். முழுமுதற் கடவுள் அல்லது அவரது தூய பக்தரின் கருணையினால், அருவ பிரம்மன், மற்றும் உள்ளத்தில் உறையும் பரமாத்மாவைப் பற்றி ஞானத்தினைக் கடந்து, கடவுள் ஒரு நபர் என்ற கருத்திற்கு இவர்கள் உயர்வு பெறுகின்றனர். துன்பமுற்றவர், கேள்வியாளர், அறிவைத் தேடுவோர், செல்வத்தை வேண்டுவோர் ஆகிய நால்வரும், ஆன்மீக முன்னேற்றத்திற்கும் ஜட இலாபத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை முழுமையாகப் புரிந்து கொண்டபின் தூய பக்தர்களாகின்றனர். இத்தகு தூய நிலையை அடையாமல், பகவானது திவ்யமான தொண்டில் ஈடுபட்டிருக்கும் பக்தர்கள், பலன்நோக்குச் செயல்கள், பௌதிக அறிவைத் தேடும் எண்ணம் போன்றவற்றினால் களங்கத்துடன் வாழ்கின்றனர். எனவே தூய பக்தித் தொண்டினை அடைவதற்கு முன் இந்த நிலைகளையெல்லாம் கடந்தாக வேண்டும்.
(பகவத் கீதை உண்மையுருவில் / அத்தியாயம் ஏழு / பதம் 16)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment