ஶ்ரீ கிருஷ்ண சைதன்யரின் லீலைகள்
ஸங்கீர்த்தன இயக்கத்தின் தொடக்கம்
ஒருநாள், பகவான் நரசிம்மதேவரின் விக்ரஹத்தை வழிபட்டுக் கொண்டிருந்த ஸ்ரீவாஸ பண்டிதரின் வீட்டினுள் ஓடிவந்த நிமாய், ஸ்ரீவாஸரே! நீ யாரை வழிபடுகின்றாயோ அவர் தற்போது உன் முன் இருப்பதைக் கவனித்துப் பார்!” என்று கூற, தனது கண்களைத் திறந்த ஸ்ரீவாஸர், சங்கு, சக்கரம், கதை, மற்றும் தாமரை மலருடன் நான்கு கரங்களுடைய ரூபத்தில் கௌராங்கரைக் கண்டார். திகைப்புற்ற ஸ்ரீவாஸ பண்டிதர் மகிழ்ச்சியில் அழத் தொடங்கினார். நரசிம்மரை வழிபடுவதற்காக தயாரித்திருந்த உபகரணங்களைக் கொண்டு, தன்னை வழிபடுமாறு கௌராங்கர் ஸ்ரீவாஸரிடம் கேட்டார். அவ்வாறே செய்து முடித்தபின் ஸ்ரீவாஸரும் அவரது குடும்பத்தினரும் பகவானின் முன்பு விழுந்து வணங்கினர். திருப்தியுற்ற பகவான் தனது தாமரைத் திருவடிகளை அவர்களின் சிரசில் வைத்தார்.
அடுத்தபடியாக, கிருஷ்ணரின் ரூபத்தை ஸ்ரீவாஸருக்குக் காட்டிய பகவான் கௌராங்கர், ஸங்கீர்த்தன இயக்கத்தை எதிர்க்கக்கூடிய எவரைக் கண்டும் அச்சம்கொள்ள வேண்டாம். நான் ஒவ்வொருவருடைய இதயத்திலும் இருக்கும் காரணத்தினால் யாரும் எனது விருப்பத்திற்கு எதிராக எதையும் செய்ய முடியாது. என்னால் கொடிய காட்டு விலங்குகளைக்கூட கிருஷ்ண பிரேமையினால் ஊக்குவிக்க முடியும்,” என்று அவருக்கு உறுதியளித்தார். தனது திறனை நிரூபிக்க ஸ்ரீவாஸருடைய சகோதரனின் நான்கு வயது மகள் நாராயணியை அழைத்தார்: நாராயணி! ஹரே கிருஷ்ண என்று உச்சரித்து பரவசத்தில் அழுவாயாக!” உடனடியாக தெய்வீக அன்புப் பரவசத்தினால் மயக்கமுற்ற நாராயணி, நடனமாடவும் அழவும் தொடங்கினாள். அன்று முதல் ஸ்ரீவாஸ பண்டிதரும் அவரது குடும்பமும் பகவான் சைதன்யரின் தீவிர பக்தர்களாயினர். இரவுதோறும் வீட்டில் ஸங்கீர்த்தனம் புரியத் தொடங்கினர்.
வாக்குவாதம் செய்யும் பண்டிதர்களிடமிருந்து தற்போது பேதப்படுத்தப்பட்ட கௌராங்கர், நவத்வீபத்தில் ஒரு வைஷ்ணவ மறுமலர்ச்சியை முன்னின்று நடத்த ஆரம்பித்தார். நித்யானந்த பிரபு அவரது முக்கிய உதவியாளரானார், ஸ்ரீவாஸ பண்டிதரின் வீடு அவரது தலைமையகமாக மாறியது.
இருபத்தியொரு மணி நேர ஸங்கீர்த்தனம்
ஒருநாள், ஸ்ரீவாஸரின் வீட்டில் விஷ்ணுவை வழிபடுவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்த கௌராங்கர், அவ்விடத்திலேயே இருபத்தியொரு மணிநேரம் இருந்தார். அப்போது அவரது பக்தர்கள், பூக்கள், துளசி, கங்கை நீர், இனிப்புகள், மற்றும் உகுந்த பொருட்களை அர்ப்பணித்து அவரை வழிபட்டனர்.
ஸ்ரீவாஸரது வீட்டு வேலைக்காரிகளில் ஒருவளான துக்கி (பொருள்: வருத்தமானவள்), பகவானின் அபிஷேகத்திற்காக களைப்பின்றி கங்கையிலிருந்து நீர் கொண்டு வந்தாள். அவளது பக்தியைக் கண்ட கௌராங்கர் அவளது பெயரை சுகி (பொருள்: மகிழ்ச்சியானவள்) என்று மாற்றினார். பின்னர், வெவ்வேறு யுகங்களில் பகவான் சைதன்யர் எடுத்த அவதாரங்களைப் புகழ்ந்து பக்தர்கள் திருப்பாடல்களைப் பாடினர். தனது அற்புதமான பெருமை, சக்தி, அழகு, மற்றும் ஐஸ்வர்யத்தை பக்தர்களிடம் வெளிப்படுத்திய பகவான், தனது வெவ்வேறு அவதார ரூபங்களான கிருஷ்ணர், நாராயணர், இராமர், மற்றும் இதர ரூபங்களை பக்தர்களுக்குக் காட்டினார். ஒவ்வொரு பக்தரும் எத்தகு தோற்றத்தின் மீது மிகுந்த பற்றுதலுடன் இருந்தனரோ, அத்தகு தோற்றத்தில் அவர்கள் கௌராங்கரைக் கண்டனர்.
பகவான் தனது பால்ய நண்பனான முகுந்த தத்தரை அழைக்காததைக் கண்ட பக்தர்கள் காரணத்தை வினவினர். பூரண சத்தியத்திற்கு ரூபமில்லை, நாமமில்லை, இயல்புகளில்லை, மற்றும் குணங்களில்லை என்று வீண்பிடிவாதமாக இருக்கும் அயோக்கியர்களான மாயாவாதிகளிடம், முகுந்தன் சங்கம் கொண்டுள்ளான். அவனை வரவிடாதீர்கள்,” என்று பதிலளித்தார் கௌராங்கர். இதனை வெளியிலிருந்து கேட்ட முகுந்தரின் இதயம் உடைந்துபோயிற்று. தன்னால் மீண்டும் அவரை எப்பொழுது அணுக இயலும் என்பதை பக்தர்களின் மூலமாக பகவான் சைதன்யரிடம் முகுந்தர் வினவ, கோடி பிறவிகளுக்குப் பின்னர்,” என்று பகவான் பதிலளித்தார். இது முகுந்தரிடம் தெரிவிக்கப்பட்டபோது, அவர் ஆனந்தத்தில் ஆடினார். நான் கோடி பிறவிகள் காத்திருக்க வேண்டியிருக்கலாம்; இருப்பினும், இறுதியில் எனது மஹாபிரபுவை நான் மீண்டும் காண்பேன்,” என்று அவர் எண்ணினார். தனது தரிசனத்திற்காக இவ்வளவு பொறுமையுடன் காத்திருப்பதில் முகுந்தர் மகிழ்ச்சியுற்றதைக் கேட்ட கௌராங்கர், உடனடியாக அவரை அழைத்தார். கிருஷ்ணரின் மீது பொறாமை கொண்ட மனிதர்களிடம் மீண்டும் சங்கம்கொள்ளக் கூடாது என்று அவரை எச்சரித்த பகவான், அவரது அபராதங்கள் அனைத்தையும் மன்னித்தார்.
ஸ்ரீவாஸருடைய மகனின் மரணம்
ஒரு மாலைப்பொழுதில் கௌராங்கரும் அவரது பக்தர்களும் ஆனந்தத்தில் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருந்தபோது, ஸ்ரீவாஸ பண்டிதரின் மகன் மரணமடைந்தான். எனினும், கௌராங்கருடைய பரவச நிலை சிதறாமல் இருப்பதற்காக, ஸ்ரீவாஸர் தமது குடும்பத்தினரின் அழுகையைத் தடை செய்தார். நள்ளிரவில் இவ்விபரத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட கௌராங்கர், உடனே தமது சகாக்களுடன் இறந்த குழந்தையைக் காணச் சென்றார். பிரிந்து போன ஆத்மா, அவ்வுடலினுள் மீண்டும் நுழைந்து தனது திடீர் மரணத்தைப் பற்றிய அற்புதங்களை விளக்கியது: நான் ஓர் ஆத்மா. பகவானின் விருப்பத்தினால் ஸ்ரீவாஸ பண்டிதரையும் மாலினி தேவியையும் எனது பெற்றோராகப் பெற்று இங்கு வந்தேன். மேலும், அதே பகவானின் விருப்பத்தினால் எனது ஆயுள் முடிவிற்கு வந்தது. தற்போது நான் வேறு உலகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மஹாபிரபுவே! தயவுசெய்து நான் எங்கு பிறந்தாலும் தங்களின் நித்திய சேவகனாக இருக்கும்படி ஆசிர்வதிப்பீராக.” பலமான நாம ஸங்கீர்த்தனத்திற்கு மத்தியில் அந்த ஆத்மா அந்த உடலை விட்டுச் சென்றது. ஸ்ரீவாஸரது குடும்பத்தினரும் தங்களது ஆழ்ந்த துக்கத்திலிருந்து விடுபட்டனர்.
நாளை . .
ஜகாய், மாதாய் விடுதலை
தொடரும் . . .
( "இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com")
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment