தாய் யசோதை ஸ்ரீ கிருஷ்ணரை உரலில் கட்டுதல்
(ஆதாரம் ; - ஸ்ரீமத்-பாகவதம் / பத்தாம்-காண்டம் / அத்தியாயம் 9.)
***********************************************
ஒருநாள், வேலைக்காரிகள் மற்ற வேலைகளில் ஈடுபட்டிருந்ததால், தாய் யசோதை தானே தயிரைக் கடைவதில் ஈடுபட்டிருந்தாள். இதற்கிடையில் கிருஷ்ணர் வந்து தமக்குப் பால் வேண்டுமென்று கேட்க, தாய் யசோதையும் உடனே அவருக்குத் தன் முலைப் பாலை ஊட்டினாள். இவ்வாறு கிருஷ்ணருக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தபொழுது, அடுப்பில் பால் பொங்கிவழிவதைக் கண்ட யசோதை, குழந்தைக்குப் பாலூட்டுவதை உடனே நிறுத்திவிட்டு அடுப்படிக்குச் சென்றாள். தாய்ப்பலைக் குடிப்பதில இடையூறு ஏற்பட்டதால், கடுங்ககோபமடைந்த கிருஷ்ணர், ஒரு கல்லை எடுத்து தயிர்ச் சட்டியை உடைத்து விட்டு, ஓர் அறைக்குள் புகுந்தார். அங்கிருந்த புதிதாகக் கடைந்தெடுத்த வெண்ணையை எடுத்து சாப்பிடத் துவங்கினார். அடுபப்படியிலிருந்து திரும்பிய தாய் யசோதை தயிர்ச்சட்டி உடைந்துகிடப்பதைக் கண்டு, இது கிருஷ்ணரின் வேலையாகத்தான் இருக்கும் என்றெண்ணி, அவரைத் தேடிச் சென்றாள். அறைக்குள் புகுந்த அவள், கிருஷ்ணர் பெரிய உரலொன்றை குப்புறக் கவிழ்த்து, அதன்மேல் நின்றுகொண்டு, உறியில் தொங்கிய வெண்ணெயைத் திருடி குரங்களுக்கு கொடுப்பதைக் கண்டாள்.
தம் தாய் வந்துவிட்டதைக் கண்ட கிருஷ்ணர் உடனே ஒட்டம் பிடிக்கத் துவங்கினார். தாய் யசோதையும் அவரைப் பின் தொடர்ந்தாள். இவ்வாறு சிறிது தூரம் பின்தொடர்ந்து சென்றபின் அவளது பிடியில் கிருஷ்ணர் சிக்கிக் கொண்டார். தாம் செய்த குற்றத்தை எண்ணி கிருஷ்ணர் அழத்துவங்கினார். மீண்டும் இப்படிச் செய்தால் தண்டிக்கப் போவதாக பயமுருத்திய தாய் யசோதை, அவரைக் கயிற்றால் கட்டிப்போட முடிவு செய்தாள். துரதிர்ஷ்டவசமாக, கயிற்றில் முடிச்சுப் போடும் சமயம் வந்ததும், கயிற்றின் நீளம் இருவிரல்களின் அகலத்திற்குக் குறைவாகவே இருப்பதைக் கண்டாள். அதனுடன் மற்றொரு கயிற்றைச் சேர்த்துக் கட்டினாள். ஆனால் மீண்டும் அக்கயிற்றின் நீளம் இரு விரல்களின் அகலத்திற்குக் குறைவாகவே இருப்பதைக் கண்டாள். இவ்வாறு மீண்டும், மீண்டும் முயற்சித்த அவள், ஒவ்வொரு முறையும் கயிறு இரண்டு விரல்களின் அகலத்திற்குக் குறைவாகவே இருப்பதை உணர்ந்தாள். இவ்வாறு தம் பாசமுள்ள தாய் மிகவும் களைத்துப் போய்விட்டதைக் கண்ட கிருஷ்ணர், அவளால் கட்டப்பட உடன்பட்டார். இப்பொழுது அவளிடம் கொண்ட இரக்கத்தினால், தம் எல்லையற்ற சக்தியை அவளிடம் அவர் காட்டவில்லை.
தாய் யசோதையும் கிருஷ்ணரை உரலுடன் சேர்த்துக் கட்டிவிட்டு, மற்ற வீட்டு வேலைகளை கவனிக்கச் சென்று விட்டாள். அதன்பிறகு முற்றத்தில் இரு மருத மரங்கள் நிற்பதை கிருஷ்ணர் கண்டார். அம்மரங்கள் உண்மையில் குபேரனின் இரு மகன்களான நளகூவரனும், மணிகிரீவனும் ஆவர். இவர்கள் நாரத முனிவரால் மரங்களாகும்படி சபிக்கப்பட்டிருந்தனர். கிருஷ்ணர் தமது கருணையால், நாரத முனிவரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, அந்த மரங்களை நோக்கிச் செல்லத் துவங்கினார்
மருத மரங்களின் சாப விமோசனம்
(ஆதாரம் ; - ஸ்ரீமத்-பாகவதம் / பத்தாம்-காண்டம் / அத்தியாயம் 10)
*********************************
நளகூவரனும், மணிகிரீவனும் சிவபெருமானின் சிறந்த பக்தர்களாவர். ஆனால் பௌதிக ஜசுவரியத்தின் காரணத்தால் அவர்கள் அறிவற்றவர்களாகவும், கட்டுப்பாட்டில் அடங்காதவர்களாகவும் நடந்து கொண்டனர். இவ்வாறாக ஒருநாள், நிர்வாணமான பெண்களுடன் ஒரு ஏரியில் சுகபோகத்தில் ஈடுபட்டிருந்த அவர்கள், வெட்கமின்றி இங்கு மங்கும் நடந்து கொண்டிருந்தனர். திடீரென்று நாரதமுனி அவ்வழியாக வந்தார். ஆனால் செல்வ செருக்கினாலும், பொய்க் கௌரவத்தினாலும் நிதானத்தை அறவே இழந்து, நாரதர் அங்கு வந்திருப்பதைக் கண்ட பின்னரும், நிர்வாணமாக இருந்த அவர்கள், அதற்காக வெட்கப்படவும் இல்லை. அதாவது, செல்வத் சிறப்பினாலும், பொய்க் கௌரவத்தினாலும் அவர்கள் சாதாரண ஒழுக்க முறையைக்கூட இழந்தனர்.
ஒருவன் செல்வத்திலும். கௌரவமான ஓர் அந்தஸ்திலும் உயரும் பொழுது, அவன் நாரதரைப் போன்ற ஒரு முனிவர் உட்பட, யாரைப் பற்றியும் கவலைப்படாமல், பொதுவான மரியாதையைக் கைவிடுகிறான். பௌதிக குணங்களின் இயற்கையே இதற்குக் காரணம். குறிப்பாக பக்தர்களை ஏளனம் செய்யும் இத்தகைய புத்தி பேதலித்துப்போன மனிதர்களுக்கு (அஹங்கார-விமூடாத்மா), மீண்டும் ஏழ்மையில் உழல்வதே தகுந்த தண்டனையாகும். யம, நியம முதலியவற்றைப் பயில்வதன் மூலம் (தபஸா ப்ரஹ்மசர்யேண சமேனச தமேன ச), பொய்க் கௌரவத்தை அடக்குவதெப்படி என்பதை வேத விதிமுறைகள் நிர்ணயித்துள்ளன. இவ்வுலகில் செல்வச் சிறப்பெனும் கௌரவம் நிலையற்றது என்று ஒரு ஏழையை எளிதில் நம்பச் செய்து விடலாம். ஆனால் ஒரு செல்வந்தனை அவ்வாறு செய்ய முடியாது. எனவே நளகூவரனையும், மணிகீரீவனையும் மந்தமான, உணர்வற்ற மரங்கள் ஆகும்படி சபித்தன் முலம், நாரத முனிவர் ஓர் உதாரணத்தை ஸ்தாபித்தள்ளார். இது தகுந்த தண்டனையாகும். ஆனால் கிருஷ்ணர் எப்பொழுதும் கருணையுடையவராக இருப்பதால், அவர்கள் தண்டிக்கப்பட்ட போதிலும், பரமபுருஷரை நேருக்கு நேராகக் காணும் பாக்கியத்தை அவர்கள் பெற்றனர். எனவே வைஷ்ணவர்களால் அளிக்கப்படும் தண்டனை உண்மையில் தண்டனையே அல்ல; மாறாக, அது வேறொரு வகையான கருணையாகும்.
தேவரிஷியின் சாபத்தினால் இரட்டை மருத மரங்களாகப் பிறந்த நளகூவரனும், மணிகிரீவனும், நந்த மகாராஜனின் வீட்டு முற்றத்தில் நின்றபடி, கிருஷ்ணரை நேரடியாகக் காணும் வாய்ப்புக்காக் காத்திருந்தனர். தமது பக்தரின் விருப்பத்தினால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் இந்த இரட்டை மருத மரங்கரை வேருடன் பிடுங்கியெறிந்தார். இவ்வாறு நூறு தேவ ஆண்டுகளுக்குப்பின் கிருஷ்ணரால் நளகூவரனுக்கும், மணிகிரீவனுக்கும் முக்தி அளிக்கப்பட்ட பொழுது, பழைய உணர்வை திரும்பப் பெற்ற அவர்கள், தேவர்கள் செய்யத்தகுந்த பொருந்தமான பிரார்த்தனைகளைக் கிருஷ்ணரிடம் செய்தனர். இவ்வாறு கிருஷ்ணரை நேருக்கு நேராகக் காணும் வாய்ப்பைப் பெற்ற அவர்கள், நாரதர் எவ்வளவு கருணை மிக்கவர் என்பதைப் புரிந்து கொண்டனர். எனவே அவரிடம் தாங்கள் பட்ட நன்றிக்கடனை வெளிப்படுத்தி அவருக்கு நன்றி கூறினர். பிறகு பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணரை வலம் வந்தபின், அவரவர் வசிப்பிடங்களுக்கு அவர்கள் திரும்பிச் சென்றனர்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண🙏
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment