ஸ்ரீமத் பாகவதம்
நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 2 - சுருக்கம்
விதுரர் மைத்ரேயரிடம் வினவினார், மகளிடம் மிகவும் அன்பு கொண்ட தக்ஷன் அவளை ஏன் அவமதித்தார்? மேன்மையானவர்களில் சிறந்தவரான சிவபெருமானின் மீது தக்ஷன் ஏன் பகைமை கொண்டார்? மருமகனும் மாமனாரும் ஏன் தங்களுக்கிடையில் சண்டையிட்டுக் கொண்டனர் என்பதையும், சதி தமது உயிரை ஏன் மாய்த்துக் கொண்டாள் என்பதையும் தயைகூர்ந்து விளக்குவீராக.”
விதுரரால் வினவப்பட்ட மைத்ரேயர் அதுகுறித்து தொடர்ந்து பேசலானார். முன்னொரு காலத்தில், பிரஜாபதிகள் ஒருங்கிணைந்து மிகப்பெரிய வேள்வி ஒன்றைச் செய்தனர். இதில் தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் முதலியோர் கலந்து கொண்டனர். பிரஜாபதிகளின் தலைவரான தக்ஷன் வேள்விச் சாலைக்குள் பிரவேசித்தபோது, அவரது தேஜஸினால் அவையே பிரகாசமானது. அச்சமயம் சிவபெருமான் மற்றும் பிரம்மதேவரைத் தவிர மற்ற அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். அவையில் உள்ளவர்களது மரியாதையை ஏற்று, தனது தந்தையாகிய பிரம்மதேவரை பணிந்து வணங்கி அவரின் அனுமதி பெற்று இருக்கையில் அமர்ந்தார் தக்ஷன். அச்சமயம் தனக்கு எவ்வித மரியாதையும் செலுத்தாது அமைதியாக அமர்ந்திருந்த சிவபெருமானைக் கண்டு தக்ஷனுக்கு கோபம் அதிகரிக்க, அவர் சிவனுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளைக் கூறலானார்.
மகரிஷிகளே, தேவர்களே, சான்றோர்களின் ஒழுக்கம் குறித்து நான் கூறும் கருத்தைச் சற்றே கேளுங்கள். இதை நான் அறியாமையினாலோ பொறாமையினாலோ கூறுவதாக எண்ண வேண்டாம். சிவபெருமான், லோக பாலகர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கிறார். எனது புதல்வியை மணந்த மருமகனாக இருந்தும் பெரியவர்களை மதிக்கும் பழக்கத்தைக் கடைபிடிக்கவில்லை. என்னை கண்டதும் இனிய மொழிகளால் வரவேற்கவோ எழுந்து நிற்கவோ இல்லை.
இவர் நல்லவர் போல அந்தணர்களின் முன்னிலையில் அக்னி சாட்சியாக எனது மகளை விவாஹம் செய்து கொண்டார். அதனால் எனக்கு சிஷ்யனானார். எனது மகள் மான் விழியாள்; இவரது கண்களோ குரங்கின் கண்களை ஒத்திருக்கின்றன. என்னைக் கண்டவுடன் எழுந்து நமஸ்கரிக்க வேண்டிய இவர், வாக்கினால்கூட என்னை உபசரிக்கவில்லையே!
விருப்பமின்றி ஒருவன் நான்காம் வர்ணத்தவனுக்கு வேதத்தை சொல்லிக் கொடுத்ததுபோல, நானும் விருப்பமின்றியே இவருக்கு என் மகளை மணமுடித்தேன். இவர் அசுத்தமாக இருப்பவர், அஹங்காரமுள்ளவர், உலக மரியாதைகளை மதிக்காதவர். பிரேதங்கள் வசிக்கும் மயானத்தில் பூதகணங்களுடன் ஆடித் திரிகிறார். பித்தனைப் போல தலைவிரி கோலமாய் ஆடையின்றி திரிகிறார். சிதையின் சாம்பலை உடல் முழுவதும் பூசிக்கொள்கிறார். மனிதர்களுடைய எலும்புகளையும் மண்டை ஓடுகளையும் ஆபரணமாக அணிகிறார். பெயரளவில் மட்டுமே இவர் சிவன் (மங்களமானவர்), உண்மையில் அசிவன் (மங்களமற்றவர்). தமோ குணம் நிறைந்த பூத, பிரேதங்களின் தலைவர். இப்பேர்பட்ட இவருக்கு பிரம்மதேவரின் பரிந்துரையால் என் மகளை திருமணம் செய்து கொடுத்தேனே! அந்தோ பரிதாபம்!”
இவ்வாறு தக்ஷன் சிவபெருமானை பலவாறு இழிந்துரைத்தபோதும், அவர் சாந்த ஸ்வரூபியாக மறுமொழி ஏதும் கூறாது சஞ்சலமற்று இருந்தார். இதனால் தக்ஷனின் சினம் எல்லை மீறியது, வேள்வியின் அவிர்பாகத்தைப் பெற தேவர்கள் தகுதியானவர்கள் எனும்போதிலும் தேவகணங்களில் தாழ்ந்தவராகிய இவருக்கு இனிமேல் அவிர்பாகம் கிடையாது,” என்று கூறி ஜலத்தைத் தொட்டு சாபமிட்டார்.
தக்ஷன் சிவபெருமானை சபித்ததைக் கண்டு நந்திதேவர் ஆத்திரமுற்றார். கோபத்தில் அவரது கண்கள் சிவந்தன. தக்ஷனையும் அவர் சாபமிட்டதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தணர்களையும் கொடிய வார்த்தைகளினால் பின்வருமாறு சபித்தார்:
தக்ஷன் இவ்வுடலே எல்லாம் என்று ஏற்றுக் கொண்டவர். விஷ்ணு பாதத்தினை மறந்து பாலுறவு வாழ்வில் பற்று மிகுந்து அலைவதால், அதற்கு தண்டனையாக ஓர் ஆட்டின் தலையைப் பெறட்டும். சிவபெருமானை தக்ஷன் சபிக்கும்போது அதனை அனுமதித்த பிராமணர்கள் ஜனன மரணச் சுழற்சியில் இருக்கட்டும். வேதங்களின் மலர் சொற்களில் மயங்கி சிவபெருமானின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட மந்த மதியாளர்கள் எப்போதும் பலன் தரும் செயல்களிலேயே பற்றுடையோராக இருப்பாராக. அவர்கள் செய்யும் தவம், விரதம் போன்றவை உடலைப் பேணுவதற்காக ஆகட்டும். வீடுகள்தோறும் சென்று இரந்து பிழைக்கட்டும்.”
அந்தணர்கள் சபிக்கப்பட்டதைக் கண்ட பிருகு முனிவர் எதிர் சாபமிட்டார், சிவபெருமானை திருப்தி செய்வதற்கென்று விரதமிருப்பவர்கள் நாத்திகர்களாக மாறி சாஸ்திர விதிகளை மீறி நடப்பார்களாக. ஆசாரமற்று அறிவிலிகளாக ஜடை தரித்து, சாம்பல் பூசி திரிவார்களாக. சான்றோர்கள் ஏற்கும் இந்த வேத நெறிகளை அற்பமாக பேசியதால், சிவனையே தெய்வமாகக் கொள்வீர்.”
இவ்வாறு ஒருவருக்கொருவர் எதிர் சாபமளித்துக் கொள்வதைக் கண்டு வருந்திய சிவபெருமான் அங்கிருந்து அமைதியாக வெளியேறினார். பிரஜாபதிகள் தாங்கள் ஆரம்பித்த வேள்வியை முடித்து பிரயாகையில் நீராடி தங்கள் இருப்பிடம் திரும்பினர்.
நாளை . . .
சதி தன் உடலைக் கைவிடுதல் . .
தொடரும் . . . .
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment